sirukathaigal

மகன் திருந்தினான்!

 
 மகன் திருந்தினான்!-magan-thirunthinaan


மகன் திருந்தினான்!

கலிங்கப் பட்டணத்தில் கார் மேகன் என்ற பணக்கார வியாபாரி இருந்தான். அவன் நியாயம் நேர்மை தவறாதவன் என்றதால் தம் வழக்குகளைப் பலர் அவனிடம் கூறி தீர்ப்பைப் பெற்றுத் திருப்தி அடைந்து வந்தார்கள். 

கார்மேகனுக்கு கோபாலன் என்ற ஒரே மகன் இருந்தான். அவன் குடி, சூதாட்டம் போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டான். அவனது தந்தை பல முறைகளில் அறிவுரைகள் கூறிப் பார்த்தும் அவன் சற்றும் திருந்தவில்லை. 

இது கார்மேகத்திற்குப் பெரும் கவலையாகப்போய் விட்டது. தன்ஒரே மகனான அவனை இப்படியே போக விட்டால் தனக்குப் பின் பணம் சொத்து எல்லாம் இழந்து ஓட்டாண்டியாகிப் பரிதவிப்பானே, அவனை எப்படித் திருத்துவது என்று யோசிக்கலானான். அவனுக்கு ஒரு வழி தோன்றியது. 

அவன் மகனிடம் “கோபாலா! நான் கடல் கடந்து நாடுகளுக்குப் போய் வியாபாரம் செய்து நிறையப் பணம் சம்பாதித்துக் கொண்டு வரப் போகிறேன். வியாபாரத்திற்கு நிறையப் பணம் தேவைப்படுமாதலால் இங்குள்ள பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு போகப் போகிறேன்" என்றான்.

அதைக் கேட்ட கோபாலன் திடுக் கிட்டு "எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு போய் விட்டால் என் செலவுக்கு நான் என்ன செய்வது?' என்று கேட்டான். 

கார்மேகமும் "கவலைப்படாதே நீ ஊராரிடம் கடன் வாங்கிக் கொள். நான் திரும்பி வந்து எல்லாக் கடன் களையும் அடைத்து விடுகிறேன்" என்றான். கார்மேகம் கப்பலேறி வியாபாரம் செய்ய எல்லாப் பணத்துடன் அயல் நாட்டிற்குக் கிளம்பினான். 

கோபாலன் எப்போதும் போல குடி, சூதாட்டம் என்று பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான். கையில் பணம் இல்லையென்றாலும் ஊரில் எல்லோரிடமும் கடன் வாங்கி செலவு செய்து வந்தான். வரவர அவனுக்குக் கடன் கிடைப்பதும் சிரமமாக இருந்தது.

ஒரு நாள் இருமாலுமிகள் வந்து கோபாலனைக் கண்டு "உன் தந்தை வந்த கப்பல் புயலில் சிக்கிக் கடலில் மூழ்கிவிட்டது. அதிலிருந்த பொருள் களும் உன் தந்தை உட்பட எல்லாப் பயணிகளும் மூழ்கி இறந்து போய் விட்டார்கள். அதிலிருந்து உயிர் தப்பியவர்கள் நாங்கள் இருவருமே'' எனக் கூறினார்கள். 

அது கேட்டு கோபாலன் திகைத்துப் போனான். கார்மேகம் கடலில் மூழ்கி இறந்து விட்டா னென்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது. அப்போது கோபாலனுக்குக் கடன் கொடுத்தவர்கள் அவனிடம் வந்து "நீ எங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடு" என்று நெருக்கினார்கள். 

அவனும் தன் தந்தை விட்டுப் போன வீடுகளையும், நிலபுலன் களையும் விற்றுக் கடன்களை அடைக்கலானான். அச்சமயத்தில் வேறு சிலர் அவனது தந்தை தம்மிடம் கடன் வாங்கி இருப்பதாகக் கூறிப் பத்திரங்களைக் காட்டிப் பணத்தை வசூலித்துக் கொண்டு போனார்கள். கோபாலன் கணக்குப் புத்தகங்களைப் பார்த்து தன் தந்தையிடம் சிலர் கடன் வாங்கி இருப்பது கண்டு அவர்களிடம் பணத்தைக் கேட்டான். அவர்களோ தாம் கடன்களை எப்போதோ செலுத்தி விட்டதாகக் கூறி அவனது தந்தை கொடுத்த ரசீதுகளைக் காட்டினார்கள்!

கோபாலன் எல்லாக் கடன்களையும் அடைக்க வீட்டிலிருந்த சாமான்களைக் கூட விற்க வேண்டிய தாயிற்று. கடைசியில் அவனுக்கு மிஞ்சியது ஒரு வீடு தான். அவனால் முன் போலக் குடி, சூதாட்டம் என் றெல்லாம் வீண்பொழுது போக்க முடியவில்லை. வாழ்வதற்கு உழைக்க வேண்டியதாயிற்று. அவனது நண்பர்களென்று அவனை முன்பு சுற்றிச் சுற்றி வந்தவர்க ளெல்லாம் இப்போது அவனை ஏறெடுத்துக் கூடப் பார்க்க வில்லை. 

இந்த நிலையில் அவனது பிறந்த நாள் வந்தது. முன்பெல்லாம் அந்த நாள் எப்படி விமரிசையாகக் கொண் டாடப்பட்டது என்பதை கோபாலன் எண்ணி மனம் நொந்து போய் வீட்டில் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தான். அப்போது சில ஆட்கள் அவனது வீட்டிற்கு வந்து அதை அலங் கரித்தார்கள். வேறு சிலர் பல வித உணவுப் பண்டங்களை கொண்டு வந்தார்கள்.

ஊர்ப் பிரமுகர்களெல்லாம் தன் வீட்டிற்கு வந்தது கண்டு கோபாலன் ஆச்சரியப்பட்டான். அதை விட அவனுக்கு ஆச்சரியம் அளித்தது அவனது தந்தை அவனது உறவினர் களுடன் அங்கு வந்து சேர்ந்தது தான். 

தன் தந்தையைக்கண்டதும் அவன் மிகவும் மகிழ்ந்து போய் 'அப்பா! வாருங்கள். என் பிறந்த நாளை யாரோ தெரிந்து கொண்டு இப்படி தட புடலாக ஏற்பாடுகளைச் செய்திருக் கிறார்கள். அவர்கள் யாரென்று தெரிய வில்லை. நம்மிடம் முன் போலப் பணமோசொத்தோ இல்லை. எல்லா வற்றையும் என் கடன்காரர்களும் உங்களுக்குக் கடன் கொடுத்தவர்களும் எடுத்துக் கொண்டு போய் விட் டார்கள்" என்றான். 

கார்மேகமும் "இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்தது நான் தான். நம் சொத்துக்களில் எதுவும் நம்மை விட்டுப் போய் விடவில்லை. எல்லாம் நம்மிடமே இருக்கின்றன. இதோ அவற்றிற்கான பத்திரங்கள். நீ திருந்த வேண்டும் என்பதற்காகவே நான் கடலில் மூழ்கி இறந்து போன தாக ஒரு செய்தியைப் பரப்பி எனக்குப் பலர்கடன் கொடுத்தார்கள் என்று உன்னை நம்ப வைத்தேன். நீயும் உழைப்பின் முக்கியத்தை உணர்ந்து திருந்தி விட்டாய்! இது தான் நான் எதிர்பார்த்தது. அது நடந்து விட்டது” என்று கூறித்தன் மகனைக் கட்டித் தழுவினான். கோபாலன் மெய் சிலிர்த்து நின்றான்.

கதை ஆசிரியர்:சிவனார் செல்வன்

அம்புலிமாமா,




Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories



கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."