sirukathaigal

தங்கசிம்மாசனம்

தங்கசிம்மாசனம் -Golden Throne


தங்கசிம்மாசனம் 

 (கௌண்டனிய நாட்டு இளவரசன் விஜயதத்தன் விவாகம் செய்து கொண்ட பின் ராஜ குருவின் கட்டளைப்படி நகரில் அவர்குறிப்பிட்ட இடத்தில் தோண்டி ஒரு தங்க சிம்மாசனத்தை எடுத்து வந்தான். அதனை சுத்தப்படுத்தி தர்பாரில் வைத்து அதில் விஜயதத்தன் அமரஇளவரசுப்பட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விஜயதத்தன் அச்சிம்மாசனத்தில் ஏறும்போது அதன் முதல் படியிலிருந்த சத்திய சக்தி ஒருகதையைச் சொல்லி சில கேள்விகள் கேட்க, விஜயதத்தன் சரியான பதில்களைக் கூறினான். அதனால் அவனை அடுத்தபடியில் ஏற அப்பதுமை அனுமதித்தது. இரண்டாவது படியிலிருந்த தர்ம சக்தி அவனிடம் ஒரு கதை சொல்லலாயிற்று அப்போது -)

சுவர்ண நாட்டு மன்னன் குசத்துவஜன் நல்ல மன்னனென மக்களிடையே பெயர் பெற்றவன். மக்கள் அவனது ஆட்சியைப் புகழ்ந்தனர். அவனுடைய ஒரே மகன் மலயத்துவஜன். அவன் நல்ல விதமாய்க் கல்வி பயில தலைநகரிலிருந்து சற்று தூரத்திலுள்ள கிருஷ்ண சந்திரரின் குருகுலத்திற்கு அனுப்பப்பட்டான். அங்கு அவன் எல்லா சாஸ்திரங்களையும் கற்று குருவின் அன்பிற்குப் பாத்திரமான பிரதம சீடனாகத்திகழ்ந்து வந்தான். 

அவனது குருகுல வாசம் முடிந்தது. அவன் தலைநகருக்குத் திரும்பிச் செல்ல ஏற்பாடுகளைச் செய்யலானான். அப்போது அவனுக்கு வந்த செய்தி பேரிடி போல இருந்தது. அண்டை நாட்டு மன்னன் வஜ்ஜிரகீர்த்தி சுவர்ணகிரி மீது திடீர் தாக்குதல் நடத்தி அந்தப்புரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மன்னன் குசத்துவஜனையும் அவனது மனைவியையும் கொன்று விட்டானாம். சுவர்ணகிரிக் கோட்டையில் வஜ்ஜிரகீர்த்தி இருக்கிறானாம்.


இச் செய்தி கேட்டு மலயத்துவஜன் திகைத்துப் போனான். அப்போது கிருஷ்ண சந்திரர் அவனுக்கு ஆறுதல் கூறி "மலயத்துவஜா! இந்த துக்கம் உனக்குச் சாதாரணமான தல்ல. இதனைத் தாங்கிக் கொள்ளும் இதயம் வேண்டும். தற்போ தைய நிலையில் உன் எதிர்காலம் பற்றி யோசிக்க வேண்டும். இது மிக முக்கியம். உன் உயிருக்கே கூட ஆபத்து வரலாம்" என்றார்.

 மலயத்துவஜனும் "ஆமாம். என் பெற்றோரைக் கொன்ற வஜ்ஜிரகீர்த்தி என்னை மட்டும் விட்டு வைப்பானா? அவன் என்னை ஒழிக்கு முன் நான் அவனை ஒழித்து விட வேண்டும்'' என்றான். கிருஷ்ண சந்திரரும் ''நீ சொன்னது சரியே. உன் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நீ உன் முயற்சியில் வெற்றி பெறுவாயாக" என்று வாழ்த்தி அனுப்பினார். 

மலயத்துவஜன் ஒரு சாதாரணமானவன் போல உடை அணிந்து தன்வாளுடன் குதிரை மீது அமர்ந்து எங்கும் தங்காமல் போய் மறுநாள் மாலையில் சுவர்ணகிரிக்கருகேயுள்ள சிறிய நாடான வேடுவர் நாட்டை அடைந்தான். அதன் மன்னன் சிம்மகுப்தன் குசத்துவஜனின் ஆருயிர் நண்பன். தன்னைப் பார்க்க வந்த மலயத்துவஜனை அடையாளம் கண்டு கொண்டு சிம்ம குப்தன் அவனைத்தன் அந்தரங்க அறைக்கு அழைத்துச் சென்றான். அவன்தான் இன்னானென அவனிடம் கூறவே சிம்மகுப்தனும் “எனக்கு நீயாரென்று தெரியும். கடவுள் தான் உன்னை என்னிடம் அனுப்பி இருக்கிறார். என் வீரர்க ளோடு இப்போதே போய் வஜ்ஜிரகீர்த்தியைத் தோற்கடித்து அவனது நாட்டையும் உன் தந்தையின் நாட்டையும் கைப்பற்றுவோம்" என்றான்.

மலயத்துவஜனோ "நாம் அவசரப் படக்கூடாது" எனவே சிம்மகுப்தனும் "ஆம் யோசித்துச் செயல்பட வேண்டியதுதான். உனக்கு என்னென்ன வேண்டும்?" என்று கேட்கவே மலயத்துவஜனும் ''எனக்கு உதவி புரிய சுறுசுறுப்பான இளைஞன் ஒருவன் வேண்டும். கொஞ்சம் பணம், ஒருசில நகைகள், பலவகை விஷங்கள் தடவிய சில ஊசிகளும் வேண்டும். இவை தான் எனக்கு வேண்டியவை என்றான். சிம்மகுப்தனும் "இவ்வளவு தானே. இவையாவும் நாளைக் காலை தயாராக இருக்கும்'' என்றான்.

மறுநாள் காலை சிம்மகுப்தன் ஒரு வாலிபனை அழைத்துக் கொண்டு மலயத்துவஜனைக் காண வந்தான். அந்த வாலிபனைப் பார்த்ததும் மலயத்துவஜன் ஆச்சரியப் பட்டான். மறு நொடியில் அவன் ''இளவரசி சாலினிதேவியாரே! நீங்கள் எனக்கு உதவ வந்துள்ளது நான் செய்த பாக்கியம்" என்றான்.

அதுகேட்டு ஆண் வேடத்தில் வந்த சாலினி வெட்கித் தலைகுனிந்தாள். சிம்ம குப்தனும் "பேஷ்! பேஷ்!! இவள் என் மகளென்று எப்படித் தெரிந்து கொண்டாய்?" என்று கேட்டான். மலயத்து வஜனும் "போர்க் கலையில் சிறந்த இளவரசி சாலினி தங்களோடு இருக்கையில் வேறுயாரை நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? எனவே என் அனுமானம் சரி என்றாகி விட்டது" என்றான். சிம்மகுப்தனும் கேட்ட பொருள்களும் இதோ உள்ளன. உங்கள் இருவருக்கும் குதிரைகளும் தயாராக உள்ளன" எனக் கூறி அவற்றை மலயத்துவஜனிடம் ஒப்படைத்தான். 

அவர்கள் அவற்றைப் பெற்று கொண்டு குதிரைகளில் அமர்ந்து அன்று பகல் முழுவதும் பயணம் செய்து மாலையாகும் போது ஒரு காட்டுப் பகுதியில் தங்கி சற்று ஓய்வு எடுத்தார்கள். அப்போது  சாலினி' 'ஆண் வேடத்தில் வந்தது நான் தான் என்று எப்படிக் கண்டு கொண்டீர்கள்?" என்று கேட்டாள். மலயத்துவஜனும் "இதென்ன பிரம்ம வித்தையா? உன் நடை, உன் கண்கள், உன் செய்கை எல்லாம் ஒரு இளம் பெண்ணினுடையதாக இருக்கவே நீ பெண்தான் என்று கண்டு கொண்டேன்" என்றான் இதைக் கேட்ட சாலினி நாணத்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

சற்று நேரமானதும் அவர்கள் அங்கிருந்து கிளம்பிப் போய் சுவர்ணகிரியின் எல்லையை அடைந்தார்கள். அங்கு ஓரிடத்தில் தம் குதிரைகளைக் கட்டிவிட்டு நடந்தே ஊருக்குள் சென்றார்கள். மலயத்துவஜன் முக்கியமான பெரிய வீதிகளில் செல்லாமல் ஏழைகள் வசிக்கும் பகுதியை நோக்கிச் சென்றான். சாலினியும் அவனுடன் சென்றாள். ஜன நடமாட்டமே இல்லாத அப்பகுதியில் ஒரு வீட்டினுள் உள்ள யாரோ இருவர் மெதுவாகப் பேசியது அவர்களுக்குக் கேட்டது.


மலயத்துவஜன் அவ் வீட்டின் திண்ணை மீதேறி சுவரை ஒட்டி நின்று உள்ளே என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்க லானான். சாலினியும் அவனருகே வந்து நின்றாள். அப்போது ஒரு பெண் குரல் 'அடடா! அவர்கள் இளவரசரைத் தேடிப் பிடித்துக் கொல்லவா போகிறார்கள்?" என்று கேட்டது. அதற்கு பதில் கூறுவது போல ஒரு ஆண் குரல் "நாடாசை கொண்டு அலையும் வஜ்ஜிர கீர்த்தி இளவரசரை மட்டும் விட்டு வைப்பானென்று நீ நினைக் கிறாயா? அவனை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? நம் நாட்டில் கந்தர்ப்பன் போன்ற கருங்காலிகள் இருக்கும் போது எதிரிகள் பாடு கொண்டாட்டம்தானே. இந்தத் துரோகிகளே நமக்கு உண்மையான எதிரிகள். இவர்களை எல்லாம் பிடித்துக் கண்டதுண்டமாக வெட்டி கழுகுகளுக்கும் காக்கைகளுக்கும் இரையாகப் போட வேண்டும். இதுதான் இவர்களுக்கான சரியான தண்டனை" என்றான்.

அப்போது பெண் குரல் “என்ன சொன்னீர்கள்? நம் படைத்தளபதி கந்தர்ப்பர் துரோகியா? நம்ப முடியவில்லையே" என்று சற்று உரக்ககூறியது. அது கேட்டு ஆண் குரல் ''உஷ் மெதுவாகப் பேசு. கத்தாதே. யாராவது கேட்டு விட்டால் நமக்குத் தான் ஆபத்து. பாதி ராத்திரியாகி விட்டது. பேசினது போதும். போய் படு" என்றது. அதன் பின் பேச்சுக் குரல் எதுவும் கேட்கவில்லை. 

சற்று நேரம் பொறுத்திருந்து விட்டு மலயத்துவஜன் அவ்வீட்டின் கதவைத் தட்டினான். அப்போது சற்று முன் பேசிய ஆண்குரல் கதவருகே நின்று சற்று பயந்த குரலில் "யாரது?” என்று கேட்டது. பதிலுக்கு 'பயப்படாதே. நண்பன் தான்'' என்றான்.ஓரிரண்டு நிமிடங்கள் கழித்தே கதவுதிறக்கப்பட்டது.மலயத்துவஜனும் சாலினியும் சட்டென  அவ்வீட்டிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் கதவை மூடி விட்டு வீட்டுக்காரனிடம் தாங்கள் இன்னாரென்பதைக் கூறினார்கள்.

தன் வீட்டிற்கு வந்திருப்பவன் இளவரசன் மலயத்துவஜன் என்று தெரிந்து கொண்டான் அந்த வீட்டின் சொந்தக் காரனான சுகேது. அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மலயத்துவஜன் அவனிடம் பல கேள்விகளைக் கேட்டுத் தனக்கு வேண்டிய விவரங்களைச் சேகரித்துக் கொண்டான். மறுநாள் காலையில் மயலத்துவஜன் கூறியபடி வஜ்ஜிரகேதுவின் படுக்கை அறைக்குக் காவலாக உள்ள குருவண்ணனை சுகேது தன் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

மலயகேது அவனிடம் நிலைமையை விளக்கி அவன் செய்ய வேண்டியது என்ன என்பதனையும் எடுத்துரைத்தான். அதைக் கேட்ட குருவண்ணன் நடுங்கினான். அப்போது மலயத்துவஜன் ஒரு முத்து மாலையை எடுத்து அவனுக்குக் கொடுக்கப் போகை யில் குருவண்ணன் "வேண்டாம். இப்போது இது போன்ற விலையுயர்ந்த பொருள்கள் என்னிடம் இருந்தால் எனக்கே ஆபத்து. இறந்த மன்னரிடம் நான் விசுவாசம் கொண்டவன். எனவே நீங்கள் கூறியபடியே செய்கிறேன். நீங்கள் மட்டும் இரவில் இரண்டாவது ஜாமம் கழிந்ததும் வந்து விடுங்கள்" என்று கூறி மலயத்துவனுக்கு விழுந்து வணக் கம் செலுத்திவிட்டுச் சென்றான்.

குருவண்ணன் சென்றபின் படைத்தளபதி கந்தர்ப்பனின் படுக்கையறைக்குக் காவல் இருக்கும் வீரண்ணனை சுகேது அழைத்து வந்தான். மலயத்துவஜன் அவனிடம் தான் யாரென்பதைக் கூறவே அவன் திடுக்கிட்டான். அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது. அவன் இளவரசன் கேட்ட உதவியைச் செய்வதாக உடனேயே கூறினான். அப்போது இளவரசன் ஒரு சிறு ஊசியை எடுத்து அதை என்ன செய்ய வேண்டுமெனக் கூறியவாறே வீரண்ணனின் கையில் குத்தினான். வீரண்ணன் தேள்கடிபட்டவன் போல அலறினான். மறுநிமிடம் அவனை சாலினியின் உதவியுடன் மலயத்துவஜன் கட்டிப் போட்டான்.

அதன் பிறகு மலயத்துவஜன் கூறியபடி சுகேது வீரண்ணனின் மனைவியையும் அவனது ஒரே மகனான சிறுவனையும் அழைத்து வந்தான். அவர்களோடு பேசிய வாறே மலயத்துவஜன் சிறு ஊசிகளால் அவர்களது உடலைக் குத்தினான். அவர்கள் நினைவிழந்து கீழே விழுந்தார்கள். அப்போது மலயத்துவஜன் வீரண்ணனைப் பார்த்து 'நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் உன் உடலில் தேளின் விஷத்தையும் உன் மனைவிக்கும், மகனுக்கும் மயக்க மருந்தையும் உடலில் செலுத்தினேன். இனி மேலாவது நல்லதை நினைத்து நேர் வழியில் செல்ல முயற்சி செய். 

அப்படிச் செய்யத் தவறினால் முதலில் உன் குடும்பத்தவரும் பிறகு நீயும் பாம்பின் கொடிய விஷம் உடலில் புக இறந்து போவீர்கள். என்ன செய்வதென்று நன்கு யோசித்து ஒரு முடிவிற்குவா" என்றான்.

அதைக் கேட்ட வீரண்ணன் கண்ணீர் உகுத்துக் கதறி இளவரசன் கூறுகிறபடியே நடப்பதாகக் கூறினான். உடனே மலயத்துவஜன் மாற்று மருந்தை அவனது உடலில் செலுத்தி "இன்றிரவே அதைச் செய்தாக வேண்டும். நாளைக் காலைவரை உன் மனைவியும் மகனும் இங்கேயே இருப்பார்கள். நான் சொன்னபடி நீ செய்து முடித்த பிறகே நாளைக் காலை இவர்களை நீ உயிருடன் காண முடியும். இதை நினைவில் வைத்துக் கொள்' என்று கூறி அவனது கட்டுகளை அவிழ்த்து விட்டான்.

(தொடரும்)

அம்புலிமாமா 



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie

 


கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."