sirukathaigal

கடவுள் கைவிடமாட்டார்


கடவுள் கைவிடமாட்டார்-God will not give up

கடவுள் கைவிடமாட்டார்

எளியாரை வலியார் வாழ்த்தினால், வலியாரை தெய்வம் வாழ்த்தும் என்பது பழமொழி. நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் சரி. செய்தவை, பன் மடங்காகப் பெருகித் திரும்பி வரும். சந்தேகமே இல்லை. திருப்பெருந்துறையில், சிவனடியார்கள் பலர் வாழ்ந்து வந்தனர். கோவில் செல்வதும், ஆண்டவனை வழிபடுவதுமாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்தனர். 

அது, பாண்டிய மன்னரிடம் அமைச்சராக இருந்தவரின் கண்களை உறுத்தியது. மன்னரிடம், 'இவர்கள் இருக்கும் வீடுகளும், சுற்றியுள்ள நிலங்களும் என்னுடையவை...' என்று சொல்லி, அவரை நம்பச் செய்து விட்டார், அமைச்சர்.

அகத்தியரால் வகுக்கப்பட்ட எல்லைக் கற்களையும் பிடுங்கி எறிந்தார். அடியார்களை எல்லாம், அடித்து விரட்டி, அவர்கள் இருந்த வீடுகளில், தன் ஆட்களைக் குடியேற்றினார், அமைச்சர். எதிர்க்க இயலாத அடியார்கள் மறைவாக வாழ்ந்து, தினமும் திருப்பெருந்துறை உறை சிவபெருமானை வழிபட்டு, முறையிட்டு வந்தனர்.

ஒரு முதியவர் வடிவில் வந்தார், திருப்பெருந்துறை ஈசன். 'கவலைப்படாதீர்கள். நீங்கள் இழந்ததை எல்லாம், மீட்டுத் தருகிறேன். அதற்கு உண்டான ஆவணங்கள் எல்லாம் என்னிடம் இருக்கின்றன. வாருங்கள்...' என்று, அடியார்களை அழைத்துச் சென்று, மன்னரிடம் முறையிடவும் செய்தார்.

'மன்னா, முன்னோர்கள் காலத்தில் இருந்து வழி வழியாக வந்த எங்கள் உடைமைகளை, உங்கள் அமைச்சர் அபகரித்து விட்டார். எல்லையை வரையறை செய்து அகத்தியரே எல்லைக்கற்கள் நட்ட இடம் அது. இதோ அதற்கான ஆவணங்கள்...' என்று ஆவணங்களையும் காட்டினார், முதியவரா  வந்த, ஈசன்.

அமைச்சரும், தான் தயாரித்து வைத்திருந்த ஆவணங்களைக் காட்டி வாதிட்டார். செய்வதறியாமல் திகைத்தார், மன்னர். இறுதியாக, 'சரி, அந்த இடம் உங்களுடையது தான் என்பதற்கு, இருவரும் வேறு ஏதாவது அடையாளம் சொல்லுங்கள்... என்றார், மன்னர். 

'நுாறு அடி ஆழம் தோண்டினாலும் தண்ணீர் வராத பூமி அது. ஆற்றுப்பாசனம் தான்... என்றார், அமைச்சர். முதியவராக வந்த ஈசனோ, 'ஒரு சில அடிகள் தோண்டினாலே, தண்ணீர் வரும்...' என்றார். அனைவருமாகப் போய், குறிப்பிட்ட அந்த இடத்தைத் தோண்டினர்.

ஒரு சில அடிகளில் தண்ணீர் பீறிட்டு வெளி வந்தது. அமைச்சரின் முகம் வெளிறியது. உண்மை உணர்ந்த மன்னர், அமைச்சரை தண்டித்தார். 'முதியவர் வடிவில் வந்து, இழந்த எங்கள் உடைமைகளை மீட்டுத் தந்தது, திருப்பெருந்துறை ஈசனே...' என்று மகிழ்ந்த, அடியார்கள், பழையபடியே தங்கள் வீடுகளில் குடியேறினர்.

தெய்வம் ஒருபோதும் கை விடாது. ஏதாவது ஒரு வடிவில் வந்து, நாம் இழந்தவைகளை மீட்டுத் தரும். இத்தகவலை, திருப்பெருந்துறை தல புராணம் விரிவாகவே சொல்கிறது.


கதை ஆசிரியர் :பி.என்.பரசுராமன்

வாரமலர்


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


கடவுள் கைவிடமாட்டார் கடவுள் கைவிடமாட்டார் Reviewed by Sirukathai on ஜூன் 25, 2025 Rating:

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."