நண்பரின் நல்லெண்ணம்!
நண்பரின் நல்லெண்ணம்!
நெருங்கிய நண்பர் ஒருவருக்கு, ஒரு மகன், ஒரு மகள். அரசு பணிக்கான தேர்வெழுத வழிகாட்டி, இருவரையுமே, அரசு ஊழியர் என்ற கவுரவத்தை பெற வைத்து விட்டார்.
சமீபத்தில் மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்க வந்தார். அழைப்பிதழில், அவருடைய முழு முகவரி மற்றும் மொபைல் எண்ணையும் அச்சிட்டு, 'அரசுத் தேர்வுகள் எழுத தேவைப்படும் ஆலோசனைகள் மற்றும் 'ஸ்டடி மெட்டீரியல்'களுக்கு, எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்; உங்கள் குடும்பத்திலும் அரசு ஊழியர்களை உருவாக்குவோம்...' என, குறிப்பிட்டிருந்தார்.
அதுபற்றி அவரிடம் கேட்டேன்.
'யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் என்பதை, அனுபவ ரீதியாக செயல்படுத்தி பார்க்கும்போது, கிடைக்கும் மன நிறைவும், மகிழ்ச்சியும், அளப்பரியது. அதற்காகவே இந்த முயற்சி...' என்றார், நண்பர்.
தன் வீட்டு பிள்ளைகளைப் போலவே, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு பிள்ளைகளும், அரசு பணியில் சேர்வதற்கு வழிகாட்டி உதவ, வலிந்து முயற்சி செய்கிறார். அது மட்டுமின்றி, அதற்காக, தன் மகள் திருமண அழைப்பிதழை பயன்படுத்திக் கொண்டவரின் நல்லெண்ணத்தை மனதார வாழ்த்தினேன்.
சி.அருள்மொழி,

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."