sirukathaigal

நரியின் தவிப்பு!

நரியின் தவிப்பு!

சிங்கராஜா தலைமையில், வன அரசு சிறப்பாக நடந்து வந்தது.நல்லாட்சியின் அடையாளமாக, 'வனமணி' என்ற விருது அளித்து, விலங்குகளை பாராட்டுவதை தொண்டாக செய்து வந்தது.

அழகு, அறிவு, தொண்டு, இசை என, சிறந்து விளங்கும் மிருகங்களை, தேடி கண்டுபிடித்து விருது வழங்கி கவுரவித்தது சிங்கராஜா. அந்த விருதை, தன் துணையான பெண் நரிக்கு பெற்றுக் கொடுக்க எண்ணியது, ஆண் நரி. அதற்காக, பல வழிகளில் முயன்றது.

புலியிடம் சென்றது; மானைத் தேடி சென்று கெஞ்சியது; மயிலிடம் பல்லிளித்தது; கரடி, காட்டுக் கழுதையிடமும் கூட சென்றது. விருதுக்கு, பெண் நரியை பரிந்துரை செய்யுமாறு வேண்டி, பரிசுகளை தந்து, பற்களை காட்டி நின்றது. 

'நரியாரே... மனைவி மீது, நீ கொண்டுள்ள ஆசை அனைவருக்கும் தெரியுமே! அதற்காக, விருது வாங்கி கொடுக்க இப்படியா அலைவது... உன்  மனைவிக்கு முறையான பயிற்சி கொடுக்க முயற்சி செய். தகுதி இருந்திருந்தால், யானையே பரிந்துரை செய்திருக்குமே... முதலில், தகுதியை உயர்த்த வழியைப் பார்; பின் பரிந்துரை கேட்டு வா... ' என்று விரட்டியடித்தன மிருகங்கள்.

ஆண் நரிக்கு, கடும் கோபம்; கன்னா பின்னா என திட்டியபடி, 'என் மனைவிக்கு கிடைக்காத விருது யாருக்கும் கிடைக்க கூடாது...' என, சாபம் இட்டது. பொறாமையில் அலைந்தது. 

தனியாக, ஒரு விருது உருவாக்கி, மனைவிக்கு வழங்க முடிவு செய்தது. அதன்படி, 'தேவமாமணி' என்ற விருதை உருவாக்கியது. இதற்காக, பல இடங்களில் கடன் வாங்கியது. மஞ்சள் ஒளி சிந்தும் வகையில் கேடயம் தயாரித்தது.

ஒருநாள்- 

விலங்குகளை அழைத்த நரி, விருந்து கொடுத்து உபசரித்தது. விருந்தின் போது, தேவமாமணி விருதை, கரடியின் கையால், தன் அன்பு மனைவிக்கு கொடுக்க வைத்தது. 

பெண் நரி மகிழ்ந்து, ஆடிப்பாடி மகிழ்ந்தது. 

தொடர்ந்து மனைவியை மகிழ்விக்க, கடன் வாங்கியது நரி. திருப்பிக் கேட்டு கடன்காரர்கள் நெருக்கியதும், என்ன செய்வது என தெரியாமல் விழித்தது. தலைமறைவாக திரிந்தது. 

பெண் நரியோ, 'உங்களை யார் இப்படி எல்லாம் செலவழித்து, கடனாளியாகச் சொன்னது...' என, திட்டி தீர்த்தது. 

'அடப்பாவி... உன்னை திருப்திப்படுத்த தானே விழா எடுத்தேன்; இப்போ, நீயே திட்டுகிறாயே' என, எண்ணி நொந்த ஆண்நரி, உண்மை நிலையை உணர்ந்தது. கடனை தீர்க்க உழைக்க ஆரம்பித்தது. 

பட்டூஸ்... ஆடம்பர செலவு செய்து, கடனாளிகளாகி அவதிப்படுகின்றனர். பலர். அப்படிச் செய்வதால், துன்ப தான் பெருகி வரும்.



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."